உலகம்

“ராகிங் கொடுமை; வாழ்வதற்கே விருப்பமில்லை”: மனம் வெதும்பி தாயிடம் அழும் சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் ராகிங் கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை. பல உயிர்களைக் காவு வாங்கிவரும் இந்த ராகிங் கொடுமை உலகெங்கிலும் தற்போதும் நிகழ்ந்து வருகிறது.

மாணவர்களிடையே நிலவும் ராகிங் கொடுமையை தடுக்க கல்வி நிலையங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதன்படி சமீபத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மனம் வெதும்பி தற்கொலை செய்துக்கொள்வதாக தனது தாயிடம் பேசும் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். இந்நிலையில், பிரிஸ்கோன் பகுதியில் படிக்கும் தனது மகனை அழைத்துச் செல்வதற்காக கடந்தவாரம் யர்ராகா சென்றுள்ளார்.

அப்போது பேருந்தில் இருந்து வீட்டிற்கு வராமல் குவாடன் பேல்ஸ், தான் அனுபவித்த மோசமான சம்பவத்தை சொல்லமுடியாமல் அழுதுள்ளான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து வைத்து தாய், நடந்தவற்றைக் கேட்டார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் குவாடன் பேல்ஸ், தன்னை உடன் படிக்கும் சக மாணவர்கள் உருவ கேலி செய்வதாகவும், குள்ளன் என அழைப்பதாகவும் அழுதுகொண்டே பேசுகிறார்.

மேலும், “எனக்கு இங்கு வாழ்வதற்கே விருப்பமில்லை; ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் இறந்துவிடுகிறேன். இல்லை யாராவது என்னை கொன்றுவிடவேண்டும் என எண்ணினாலும் எனக்கு சந்தோஷம் தான்” எனப் பேசுகிறான்.

சிறுவன் பேசும் இந்த வார்த்தைகள் மூலம் எவ்வளவு பாதிப்புகளை அந்த சிறுவன் அனுபத்திருப்பான் என்பதை வீடியோ பார்க்கும் அனைவராலும் உணரமுடியும். தாயின் சமாதானத்தை ஏற்க மறுத்து சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் தாய் முறையிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குழந்தைக் கல்வி முறையில் ராகிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை பாடத்தின் மூலம் கொண்வரவேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இது பெரிய குற்றம் என புரியவைக்க முடியவில்லை என்றால் எதிர்காலத்திலும் இது தொடரும். இதனால் கல்வி நிலையங்களில் அதிக மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் சொல்வார்கள் என கல்வியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Also Read: “மலை அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் 3,350 டன் தங்கம்” : உ.பி-யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!