உலகம்

10 நாட்களாக ஓய்வு உறக்கமின்றி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றிய இளம் டாக்டர் உயிரிழப்பு!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு உறக்கமின்றி சிகிச்சையளித்து வந்த இளம் மருத்துவர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 28 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் கோரத் தாக்குதலால் சீனா நிலைகுலைந்து போயுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக, ஓய்வு உறக்கமின்றி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற 27 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காக்க ஓய்வின்றிப் பணியாற்றியதே அவரது உயிழப்புக்குக் காரணம் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர் சாங் யிங்கீயின் மறைவு சீன மக்களை சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

இளம் மருத்துவர் சாங் யிங்கீயின் உயிரிழப்பு குறித்து அவரது சகோதரியும், தந்தையும் மனமுடைந்து பேசியுள்ளனர். அவரது சகோதரி கூறுகையில், “எல்லோருக்கும் உதவும் மனம் கொண்ட சாங்கின் மறைவு எங்களுக்கு பேரிழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா வைரஸ்” காதலை என்ன செய்யும்? : சீனப் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர் - சுவாரஸ்ய நிகழ்வு!