
நாடாளுமன்றத்தின் 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன.28 அன்று ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.09) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“இந்தியா 4.0 சதவீத பணவீக்க விகிதத்துடன் அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் உள்ளது” குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) 2026ஆம் ஆண்டுக்கான 190 நாடுகளின் பணவீக்க முன்னறிவிப்புத் தரவுகளின்படி, இந்தியா 4.0 சதவீத பணவீக்க விகிதத்துடன் அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததால், இறக்குமதி விலைகள் அதிகரித்ததா?
அதன் விளைவாக தங்கம், வெள்ளி மற்றும் பிற இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்தனவா? இதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?”

“மாசுக் கட்டுப்பாடு குறித்த தீவிர ஆய்வு நடத்துக!” என வலியுறுத்தி தி.மு.க மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “2011 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளில், சீனா நகர்ப்புறங்களில் PM2.5 அளவை 32 சதவீதம் வரையிலும், உலக அளவில் சுமார் 10 சதவீதம் வரையிலும் கணிசமாகக் குறைத்துள்ளது, ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவின் சராசரி அளவு வெறும் 0.4 சதவீதம் மட்டுமே மாறியுள்ளது என்பது உண்மையா?
சமீபத்திய கண்காணிப்புத் தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் தொழில்துறை மையங்களில் தற்போதைய காற்று மாசுபாட்டின் அளவுகள் (PM2.5, PM10, NO₂, SO₂) என்ன?
விதிமுறைகள் இருந்தபோதிலும், பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவுகள் தேசிய சுற்றுப்புறக் காற்றுத் தரநிலைகளுக்கு மேல் தொடர்ந்து இருப்பதற்கான காரணங்கள் என்ன?
மாசுபடுத்தும் தொழில்களுக்கான சட்டத்தின்கீழ் உள்ள அபராத விதிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் வாகனங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
குறிப்பாக டெல்லி-என்சிஆர், மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கடுமையான மாசுபாட்டை எதிர்கொள்ளும் பிற நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன?”






