Viral

வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய கல்லூரி முதல்வர்... வீடியோ வைரல்... டெல்லியில் நடந்தது என்ன?

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி தங்கள் அரசியலில் மாடு சார்ந்தவைகளுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. மாட்டிறைச்சி முதல் கோமியம், சாணம் வரை அனைத்திலும் பாஜக அரசியல் செய்து வருகிறது. மக்களை மூட நம்பிக்கைகளின் உச்சத்திலே கொண்டு போவதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்று ஐஐடி இயக்குனர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு தொடர்ந்து மாட்டு கோமியம், சாணம் குறித்து பல விஷயங்களை பாஜக செய்து வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் வகுப்பறை சுவற்றில், கல்லூரி முதல்வரே சாணத்தை எடுத்து பூசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாஜக ஆளும் டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் லட்சுமிபாய் கல்லூரி இயங்கி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக பிரத்யுஷ் வத்சலா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த கல்லூரியில் அமைந்துள்ள C Block வகுப்பறை ஒன்றில், கல்லூரி முதல்வர் வத்சலா மாட்டு சாணத்தை பூச திட்டமிட்டுள்ளார். அதன்படி சக ஊழியர்களின் உதவியோடு பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமலே தனது கைகளால் சாணத்தை எடுத்து வகுப்பறை சுவற்றில் பூசினார். ஒரு கல்லூரி முதல்வரே வகுப்பறை சுவற்றில் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விவாகரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆராய்ச்சிக்காக மட்டுமே வகுப்பறை சுவற்றில் சாணம் பூசப்பட்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார். மேலும், "மாட்டுச் சாணத்தில் பல விஷயங்கள் இருக்கிறது. அதை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுடன் பொருந்தி வாழ வேண்டும். கேண்டீன் கட்டடத்துக்கு மேல உள்ள அறைகளில் வகுப்புகள் நடக்கும். வெப்பம் அதிகம் இருக்கும். அங்கு ஃபேன்கள் இருக்கின்றன. வெப்பத்தை தணிக்க வேண்டும் என்றுதான் இப்படி செய்தேன்." என்று வினோதமான விளக்கமும் அளித்தார்.

எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளதோடு கண்டனங்களும் எழுந்துள்ளது.

Also Read: “மாநில உரிமை மீட்பிற்கான குழு அமைத்திருக்கிற முதலமைச்சருக்கு நன்றி” : முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!