தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர்களை வைத்து முட்டுக்கட்டையிடுவதும்; பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பதும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இதனால், இந்தியாவை ஒற்றை நாடாக, ஒற்றுமையாக காக்க முழுமையான பங்களிக்கும் மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இன்றியமையாத துறைகள் சார்ந்து கடுமையாக வஞ்சிக்கப்படுகின்றன.
இத்தொடர் வஞ்சிப்பை போக்கும் பொருட்டு, மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜோசப் குரியன் அளித்த பேட்டியில், “மாநில சுயாட்சி குறித்த அரசமைப்பு சட்ட விதிகளை ஆராய அமைக்கப்பட்ட குழு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் குழுவின் செயல்பாடுகள் அமையும். மாநில உரிமைகளை பாதுக்காக்க, இக்குழுவை அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
கடந்த காலங்களில், இராஜமன்னார் குழு தொடங்கி இதர குழுக்கள் வெளியிட்ட ஆணைகளை, இக்குழு பரிசீலிக்கும். மேலும், இக்குழுவில் நான் புரியும் பணிக்கு, நான் ஊதியம் பெற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.