Tamilnadu

தேர்தல் ஆணையத்தின் நம்பக்கத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது : The Hindu ஆங்கில நாளேடு குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு, தேர்தல் ஆணையம் மழுப்பலான பதிலை கூறி வருவது குறித்த ராகுலின் குற்றச்சாட்டு குறித்து இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மகாதேவபுரா மற்றும் ஆலந்த் தொகுதிகளில் நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்த ராகுல்காந்தி புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி உள்ள இந்து நாளேடு, அதுகுறித்து தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்வதில் இருந்து தேர்தல் ஆணையம் நழுவிவிட்டதாக சாடியுள்ளது.

2023 தேர்தலில் ஆலந்த் தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் முறைகேடாக உள்ளதாக ராகுல்காந்தி கூறியதை சுட்டிக்காட்டி உள்ள இந்து நாளேடு, முக்கியமான தொழில்நுட்ப ஆவணங்களை தேர்தல் ஆணையம் அணுக மறுத்ததால், மோசடி நடவடிக்கை மீதான புலன் விசாரணை முடங்கியதாக கூறியுள்ளது.

இதன்மூலம், வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் மோசடி தொடர்ந்ததாகவும் கூறியுள்ளது. படிவம்-7 தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவும், மூன்றாம் தரப்பினரால் வாக்காளர்கள் நீக்கப்படுவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என இந்து ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடந்த விதம் தவறானது என குறிப்பிட்டுள்ள இந்து நாளேடு, ஆலந்த் தொகுதி குறித்த வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பது, தேர்தல் ஆணையம் மீதான எதிர்மறை எண்ணத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் செயல்முறை மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்த தரவுகளை, மறுபரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள இந்து நாளேடு, ராகுல்காந்தியின் நியாயமான தேர்தல் நடைமுறை கோரிக்கையின் அவசியம் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது.

Also Read: ”கீழடியைத் தொடர்ந்து பூம்புகாரின் பெருமையையும் வெளிக்கொணர்வோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!