மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்து கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்தது காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகார்.
"பூம்புகாரில்" பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை பேராசிரியர் கே.ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்" என நிறைந்து வளம் பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.