Tamilnadu

”வெட்கமே இல்லாமல் அமெரிக்காவில் விருந்து சாப்பிடும் பிரதமர் மோடி” : வைகோ கடும் தாக்கு!

இந்தியர்களை கை விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு தான் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ளது. அதனால்தான் அமெரிக்க அரசு இந்தியர்களை கை விலங்கிட்டு நாடு கடத்தியுள்ளது.

2 நபர்களுக்காக மட்டுமே மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சியை நடத்தி வருகிறது. இவர்களுக்கு மக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லை. அதன் வெளிப்பாடாகவேதான் ஒன்றிய அரசின் பட்ஜெட் உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி அரசை தூக்கி எரிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,"இந்தியர்களை அவமானப்படுத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவை கண்டிக்கவில்லை. வெட்கமே இல்லாமல் அமெரிக்காவில் மோடி விருந்து சாப்பிடுகிறார். இந்திய நாட்டின் குடிமகனுக்கு எங்கு துயரம் நேர்ந்தாலும் பிரதமர் கொதித்தெழ வேண்டாமா?. ஆனால் மோடி மவுனமாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !