Tamilnadu

சிறுமி பாலியல் புகாரில் அதிமுக நிர்வாகி கைது : இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #இவன்தான்_அந்தSIR ஹேஷ்டேக் !

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக உயர்நீதிமன்றமே கண்டித்திருந்தது. அதோடு குற்றவாளி ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை, அது மாணவியை மிரட்டுவதாக செய்தது என்று போலிஸார் விளக்கமளித்தும் அது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

இதனிடையே சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை ண்ணீர் கேன் போடும் சதீஷ் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் என இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடுவான்கரை பகுதியை சேர்ந்த அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி புகார்தாரரை தாக்கியதாகவும், புகார் மீதான சரிவர விசாரணை நடத்தவில்லை என குற்றஞ்சாட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சதீஷுக்கு ஆதரவாகவும் அடைக்கலம் கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வழக்கில் அதிமுகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் #இவன்தான்_அந்தSIR என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Also Read: "தனது ஒரே வேலையையும் செய்ய மறுக்கும் ஆளுநருக்கு அளிக்கும் சம்பளம் ஒரு தெண்டம் -"முரசொலி விமர்சனம் !