Tamilnadu

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல் முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வினோத்குமார், ”குற்றவாளி சாதாரண நபர் அல்ல எனவும் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கல்வியறிவு பெற்றவர் ஒரு தவறான கருத்துக்களை பதிவிடவும் மூலமாக என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அவருக்கு நன்றாக தெரியும்.

தவறுதலாக நடைபெற்றது என்ற குற்றவாளியின் வாதத்தை ஏற்க முடியாது. இது தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிரான அல்ல ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவருடைய அந்த பதிவு அமைந்திருந்தது. எனவே சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும். அதனை ரத்து செய்யக்கூடாது” என வாதிட்டார்.

அதேபோல், எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.பின்னர் இருதரப்பு வாதங்களுக்கு பிறகும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பா.ஜ.க-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

Also Read: பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்படும் 337 டன் நச்சுக்கழிவு!