Tamilnadu

35 ஆண்டுகளுக்கு நிறைவேறாத விவசாயியின் கோரிக்கை : 3 நாளில் நிறைவேற்றிய மக்களுடன் முதல்வர் திட்டம்!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் வலையப் பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் வசிப்பவர் முத்தையன் மகன் சந்திரசேகரன். இவர் ஒரு பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து அவர்களிடம் 1988 ஆம் 21 செண்ட் நிலத்தைக் கிரயம் வாங்கினார்.

இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்திட சந்திரசேகரன் பல ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. முந்தைய ஆட்சியில் 18-4-2018 அன்று மக்கள் நேர்காணல் முகாம் வலையப்பேட்டை வருவாய் கிராமம், மாங்குடியில் நடைபெற்றது. அம் முகாமில் கலந்து கொண்ட விவசாயி சந்திரசேகரன் இந்த நிலத்திற்குப் பட்டா மாற்றம் கோரி மனு கொடுத்தார்.

நீண்டகாலமாக பட்டா மாற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் தற்போது விவசாயி சந்திரசேகரன் அண்மையில் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் திட்டமாக, “மக்களுடன் முதல்வர்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி,

ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.அத்திட்டத்தின்படி இலட்சக் கணக்கான மக்களின் கோரிக்கைகள் நிறைவேறி மக்கள் இந்த அரசைப் பாராட்டி வருகின்றனர்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்படி, கும்பகோணம் தாசில்தாரர் அலுவலகத்திலிருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாங்குடி கிராமத்திலுள்ள சமூகக் கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 20-12-2023 அன்று நடைபெற்றது.

இந்த முகாமிற்கும் உரிய ஆவணங்களுடன் சென்று சந்திரசேகரன் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2-1-2024 அன்று சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. அந்த ஆனந்தத்துடன் இந்த மாற்றத்திற்குக் காரணமான மக்களுடன் முதல்வர்

திட்டத்தையும் முதலமைச்சர் அவர்களையும் நினைந்து நினைந்து வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறார் விவசாயி சந்திரசேகரன்.

Also Read: தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சர் உத்தரவு!