Tamilnadu

திருச்சியில் கோரிக்கை வைத்த சிறுமி.. சென்னை வந்த உடனே நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று (08.06.2023) சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிராப்பள்ளிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்று கொண்டார்கள்.

அப்பொழுது சிறுமி ஒருவர் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உதவி கோரினார். உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது கோரிக்கையினை விசாரித்து உதவிடக் முதலமைச்சர் கூறினார்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், அம்மனுவை பெற்று இன்று (09.06.2023) உடனடி விசாரணை மேற்கொண்டார். அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர், நீளிகோணம்பாளையம், NKG நகர். என்ற முகவரியை சேர்ந்த முத்துகுமார் மனைவி கவிதா என்பவர் தனது கணவர் முத்துகுமார் 24.03.2022 அன்று அவரது சொந்த ஊரான மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தில் இறந்துவிட்டார். அவரது சொத்துகள் கூட்டுரிமையாக உள்ளதால் அதனை விற்பனை செய்ய தனது மாமியார் இடையூறு செய்வதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் கணவர் பெயரிலிருந்து அவரது இறப்பின் காரணமாக கூட்டுரிமையாக பெறப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பொருட்டு அனைத்து சட்ட ரீதியான உதவிகளும் இலவச சட்ட உதவிமையம் மூலம் செய்யப்படும்.

மேலும் தனது இரண்டு குழந்தைகளும் தற்போது கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் படித்து வருவதால். கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலை உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் முழுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவரின் தன்விருப்ப நிதியிலிருந்து செலுத்துவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரருக்கு தகுதியின் அடிப்படையில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு உதவியும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலம் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read: "டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !