Tamilnadu
கோபித்து அம்மா வீட்டுக்கு போன மனைவி.. கை குழந்தைக்கு விஷம் கொடுத்த கணவன்.. விபரீதத்தின் பின்னணி என்ன ?
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்.இவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
திருமணமான சில மாதங்களில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் சில நேரங்களில் மனைவி சத்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். பின்னர் அவரே சமாதானமாகி திரும்ப வருவார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவிக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே சத்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது 2-வது, 3-வது குழந்தையை வீட்டிலேயே விட்டு தன்னுடைய மூத்த மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக மனைவி வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில், கடைசி கை குழந்தை அழுதுள்ளது. அதனை சமாதானம் செய்ய சிவக்குமார் முயன்றுள்ளார். ஆனால் அது முடியவில்லை.
இதனால் மிகவும் விரக்தியடைந்த சிவக்குமார் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று கடைசி 14 மாத கை குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, விஷத்தையும் கலந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரது இரண்டாவது குழந்தைக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து ஊட்டி விட்டு, தானும் உண்டுள்ளார். இந்த சம்பவத்தை தனது அண்ணனுக்கு போன் செய்து கூறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு பதறிப்போன அண்ணன், 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கே அனைவரையும் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் சிகிச்சை பலனின்றி 14 மாத கை குழந்தை மித்ரா பரிதாபமாக உயிரிழந்தது.
தொடர்ந்து சிவக்குமார் மற்றும் 2-வது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்து ஓடி வந்த தாய் மருத்துவமனையில் கதறி அழுதார்.
திருப்பத்தூரில் குடும்பத் தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலைக்கு முயன்றதில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)
-
மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!