Tamilnadu

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதா?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 200-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைச் சோதனை செய்தபோது அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால்தான் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி 1586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

கடந்த 10 நாட்களில் 23833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் மூலம் 10 லட்சத்து 41 ஆயிரம் பேர் பங்கேற்றதில் 7500 பேர் காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் H3N2 வைரஸ் காய்ச்சலால் 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் தேவையற்ற பதட்டத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!