Tamilnadu

விமானநிலையம் வருவதற்கு தாமதம்.. இளைஞர் சொன்ன ஒரு வார்த்தையால் பதறிப்போன ஹைதராபாத் விமான நிலையம்!

ஹைதராபாத் விமான நிலையத்தில் இன்று காலை சென்னைக்கு வர இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 118 அவர்களது பாதுகாப்பு சோதனைமுடித்துவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, ஹைதராபாத் விமான நிலையத்திற்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டுத் துண்டிக்கப்பட்டது.

இதை அடுத்து ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்தைச் சோதனை செய்தனர். இந்த சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து ஹைதராபாத் விமான நிலைய போலிஸார் வெடிகுண்டு இருப்பதாக வந்த செல்போன் எண் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அது சென்னையைச் சேர்ந்த பத்திரையா என்பவரின் செல்போன் எண் என்று தெரியவந்தது. இதை அடுத்து செல்போன் டவரை ஆய்வு செய்தபோது, செல்போன் டவர் ஹைதராபாத் விமான நிலையத்தைக் காட்டியது.

உடனடியாக சுறுசுறுப்படைந்த போலிஸார், விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த பத்திரையாவை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பத்திரையா தெலுங்கானாவை சேர்ந்தவர் என்பதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்துக் கொண்டு, பணியாற்றி வருவதும் தெரிந்தது.

மேலும் சனி, ஞாயிறு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பத்திரையா இன்று மீண்டும் விமானத்தில் சென்னை திரும்ப இருந்தார். ஆனால் இவர் விமான நிலையம் வருவதற்குத் தாமதம் ஆகிவிட்டது. எனவே விமானத்தை நிறுத்த வெடிகுண்டு இருப்பதாக போன் செய்து புரளி கிளப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமானம் 117 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.

Also Read: "இஸ்லாமிய ஜிகாதிகளை கொன்றால்தான் இந்து ராஜ்ஜியம் அமையும்": பகிரங்க மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச துறவி!