Tamilnadu

தனியாக இருந்த ரயில்வே பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: கேரள இளைஞரை கைது செய்து போலிஸ் அதிரடி!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி இவர் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் அவர் இரவு நேரத்தில் பணியில் இருந்தார் . அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமைசெய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் அந்த பெண் ஊழியர் காயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் மதுரை ரயில்வே டி.எஸ்.பி பொன்னுசாமி, விருதுநகர் பிரிவு ரயில்வே ஆய்வாளர் பிரியா மோகன் உள்ளிட்ட தனிப்படையினர் இன்று கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் வாழவிளை என்ற ஊரைச் சேர்ந்த அணிஸ் (28) என்ற நபரை புளியரையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அணிஸ் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கேரளாவில் இது போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

Also Read: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !