Tamilnadu

பழனிசாமியை வரவேற்க சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள்.. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு !

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க கூட்டணியின் நிலை இப்படி இருக்க அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடப்போவது யார் என்பதில் தொடங்கி வேட்பாளர் யார் என்பது வரை பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவியது. ஒருவழியாக இறுதியில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அ.தி.மு.க தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்கவும் திருஷ்டி க்ளிக்கவும் அ.தி.மு.க.வினர் சாலையில் பூசணிக்காய்களை உடைத்தனர். பின்னர் பழனிசாமி அங்கிருந்து சென்றதும் சாலையில் கிடந்த பூசணிக்காய்களை அப்புறப்படுத்தாததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் வழுக்கி விபத்துக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்த அ.தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: ரூ.1 கோடி இருந்தால்தான் அதிமுகவில் சீட்.. ஆடியோ வெளியிட்ட OPS தரப்பு.. சர்ச்சையில் கே.பி. முனுசாமி !