Tamilnadu

திடீர் ஆய்வு.. ஆவணங்களை முறையாக பராமரிக்காத 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்: அமைச்சர் மூர்த்தி அதிரடி!

சென்னையில் உள்ள சார்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் இன்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவல்லிக்கேணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி, பின்னர் நொலம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அண்ணா நகர், அசோக் நகர், வில்லிவாக்கம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அண்ணா நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரமாக காத்திருப்பதை அறிந்து, பொதுமக்கள் காத்திருக்க வைக்கப்டடதன் காரணத்தை சார்பதிவாளரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், உரிய முறையில் விரைவாக பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, பொதுமக்களை காக்க வைத்தது, பணியை சரியாக செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சார்பதிவாளர் அகிலா, தகவல் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்ட அத்தனை பேரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

அதேபோல், சென்னை சென்னை ராயப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி,"கடந்த எட்டு மாதங்களில், பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிலங்களை முறைகேடாக ஆவண பதிவு செய்த 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலான நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்" என தெரிவித்தார்.

Also Read: ”நாளை 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!