Tamilnadu
"அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல..!" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் !
கேள்வி 1 : நீங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டம் என்று எதை கூறுவீர்கள், ஏன்?
பதில் : தாயிடம், பிடித்த குழந்தை எது என்று கேட்கப்படுவதாகவே உணர்கிறேன். அனைத்து திட்டங்களும் தமிழக முதல்வரின் குழந்தைகள்தான். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு ஊடகங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு கலை வடிவங்களை கற்பதற்கான முயற்சியாக சமீபத்தில் கலை பண்பாடு கொண்டாட்டம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக கடந்த ஜூலை 27-ம் தேதி மனநலம் உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். அதே போல, மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்தும் பரிசோதனையும் நடத்தப் படுகிறது.
ஜூலை 6-ம் தேதி கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் சிறார் திரைப்பட விழாவை தொடங்கிவைத்து, சார்லி சாப்ளினின் 'தி கிட்ஸ்' திரைப்படத்தையும் திரையிட்டோம். இவை அனைத்தும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும். மேலும் தேர்வு மட்டுமே மாணவர்களை தகுதியடையச் செய்யாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இந்த அனைத்து புதிய திட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி 2 : கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட 'இல்லம் தேடி கல்வி' மையங்கள் இன்னும் தேவையா?
பதில் : கொரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவில் மனதளவில் பாதித்தது. தற்போது, தான் சார்ந்திருக்கிற ஊரிலேயே இளைஞர்கள் மூலமாக கல்வியை மாணவர்கள் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இத்திட்டம் தொடரும். அது அவசியமும்கூட.
கேள்வி 3 : கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது, பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 100% சென்று சேர்ந்துவிடும். தற்போதைய ஆட்சி யில் தாமதம் நிலவுகிறதே.. காலணி, புத்தகப்பை உள்ளிட்டவை விநியோகத்திலும் தொய்வு ஏற்படக் காரணம் என்ன ?
பதில் : அதிமுக ஆட்சியிலும் சில ஆண்டுகளில் இவை தாமதமாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2016-17-ல் கல்வி உபகரணங்களை 14 மாதங்கள் தாமதமாக வழங்கியவர்கள் இப்போது குற்றம் சொல்கிறார்கள். 'எக்காரணத்திலும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குவதில் தாமதம் கூடாது' என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது நோட்டு புத்தகங்கள், சீருடைகள் 100 % விநியோகம் முடிந்துவிட்டது. 2021-22-ம் ஆண்டுக் கான மிதிவண்டிகளை பொருத்தவரை 56% மிதிவண்டிகள் கிடைத்துள்ளன. இதில் இதுவரை 12% மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டோம். மற்ற பொருட்களும் விரைவில் வழங்கப்படும்.
கேள்வி 4 : கொரோனா பரவலுக்கு பிறகு சுமார் 5 லட்ச மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால், போதிய கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் வரை மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டனர். அரசுப் பள்ளிகளை நாடி வந்த மாணவர்களை தக்கவைக்க அரசு தவறிவிட்டதா?
பதில் : 'அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்' எனும் கொள்கையை நோக்கித்தான் எங்கள் பயணம் செல்கிறது. இதுவரை இல்லாத வகையில், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பள்ளிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றும் அரசு அறிவுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளைவிட கூடுதலாகவே மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
- நன்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்
Also Read
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!