Tamilnadu

“தி.மு.க அரசை கட்டுப்படுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு நினைக்கிறது.. அது ஒருபோதும் நடக்காது” : முத்தரசன் பேச்சு!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இரா. முத்தரசன், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இது தொடர்பாக, முதலமைச்சர் நேரிலேயே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

தி.மு.க ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால், அதற்கு மாறாக அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், தமிழக மக்களுக்கு எதிராகவும் ஆளுநர், தமிழக பா.ஜ.க, ஒன்றிய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.

ஒன்றிய அரசு நினைப்பதை மாநில அரசுகள் செய்ய வேண்டும். ஒத்துழைக்காத மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி, பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி என்கிற அடிப்படையில் தான் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க பா.ஜ.க அரசு முயல்கிறது. அ.திமு.க அரசைப்போல தி.மு.க அரசு கட்டுப்பட வேண்டுமென நினைக்கிறது. அது நடக்காது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் அத்துமீறி செயல்படுகின்றனர்.

குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு சுற்றிக்கை அனுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது மிகப் பெரிய கண்டத்திற்கு உரியது. மாநில, தேசிய அளவில் தலைவர்கள் உருவாகி உள்ளனர். அவர்கள் மாணவர் பருவத்தில் அரசியல் பங்கேற்று உருவாகி உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: எட்டு ஆண்டுகளில் எட்டப்படாத வளர்ச்சி.. மோடி ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘முரசொலி’ ஏடு! Part-1