
ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை கொண்டு தொடர்ச்சியாக மிரட்டி வருகிறது. தற்போது மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ”திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றவே இந்த சோதனை நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்தார். அமித்ஷா தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் அவர் சாடினார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். வேட்பாளர் பட்டியலை அபகரிப்பதுதான் அமலாக்கத்துறையின் வேலையா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆவணங்களையும், வேட்பாளர் பட்டியலையும் எடுத்து செல்வதுதான் அமித்ஷா வேலையா? என்று அவர் வினவினார்.
நாட்டை பாதுகாக்க முடியாத ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தங்கள் கட்சியின் ஆவணங்களை எடுத்து செல்கிறார் என்று சாடினார். பா.ஜ.க., அலுவலகத்தில் ரெய்டு நடத்தினால் என்ன ஆகும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆவணங்களை அபகரிப்பதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
தேர்தலுக்காக தங்கள் கட்சி தொடர்பான ஆவணங்களை ரெய்டு என்ற போர்வையில் எடுத்து செல்கிறார்கள் என்றும் மம்தா குற்றம்சாட்டினார்.








