Tamilnadu

ரூ.400 கடனை திருப்பிக்கேட்ட நண்பனை தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற நண்பர்கள் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (23). 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் சுதாகரன் (22), விஜய்(24), அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சுதாகரன் மற்றும் விஜய் இருவரும் குடிப்பதற்காக நந்தகுமாரிடம் 400 ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

வெகு நாட்கள் ஆகியும் கடனை திருப்பித் தராததால் நந்தகுமார் பலமுறை அவர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடனடியாக பணத்தை திருப்பித் தருமாறு பல பேர் முன்னிலையில், சுதாகரனையும் விஜயையும் நந்தகுமார் கேவலமாக திட்டி பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த 2020 ஜனவரி 12ஆம் தேதி அன்று மாலை நந்தகுமாரிடம் கடனை திருப்பித் தருவதாக கூறி அவரை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றனர்.

கருட முத்தூர் சாந்தி கோழிப்பண்ணை பின்புறம் நந்தகுமாரை கூட்டிச்சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கீழே கிடந்த கல்லை எடுத்து நந்தகுமாரின் தலையில் போட்டு கொலை செய்தனர். நந்தகுமார் இறந்தது பற்றி அவரது தம்பிக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த நந்தகுமாரின் தம்பி பாரதிராஜா இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலிஸில் புகார் அளித்தார்.

போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுதாகரன் மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி கொலை குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும் ஆள் கடத்தல் வழக்கிற்கு 3 ஆண்டுகள் சிறை 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை விதித்தும் நீதிபதி சொர்ணம் நடராஜ் தீர்ப்பளித்தார்.

Also Read: “பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!