Tamilnadu

Foxconn தொழிற்சாலை பெண் ஊழியர்களுக்கு என்ன ஆனது?: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை!

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பெண் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து வருகின்றனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்களுக்கான விடுதி பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று விடுதியில் உணவு சாப்பிட்ட பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அங்கு உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விடுதியில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவே இதற்குக் காரணம் என அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பாத 8 பெண்களின் நிலை குறித்து ஆலை நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

16 மணி நேரமாக போராட்டம் நீடித்ததை அடுத்து பெண் தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி கணேசன், பெண் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பதாகவும் உடல்ரீதியாகவும், மன உளைச்சல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஒரு வார காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களில் கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 159 பேர் உள்நோயாளியாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 155 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகினர். மீதமுள்ள 4 பேர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளனர். உடல்நலம் தேறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

விஷமிகள் சிலர் இந்த விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றை நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து அறிவுறத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படுத்திய கேண்டீன் தற்போது மூடப்பட்டுள்ளது. தற்போதைக்கு விடுதியில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வெளியிலிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாணவர்கள்-பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள்”: தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!