Tamilnadu

வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம்..ரூ.2 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை விற்ற தாய்: விசாரணையில் பகீர் தகவல்

சென்னை அடுத்து புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவர் நேற்று புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பது போல் வந்த இரண்டு நபர்கள், அவர் வைத்திருந்த பணப் பையைப் பறித்து தப்பிச்சென்றனர்.

இது குறித்து யாஸ்மின் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருடன் யாஸ்மினுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். இதையடுத்து யாஸ்மின் கர்ப்பமடைந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகன் யாஸ்மினை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

மேலும் யாஸ்மினுக்கு மூச்சு கோளாறு பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஜெயகீதா என்பவர் யாஸ்மினுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

பின்னர், குழந்தையைக் கலைப்பது குறித்து ஜெயகீதாவிடம் யாஸ்மின் கேட்டுள்ளார். இதற்கு அவர் கருவைக் கலைக்க வேண்டாம். குழந்தை பிறந்த உடன் அதை அதிக விலைக்கு விற்று விடலாம் என கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு கடந்த 21ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஜெயகீதா இரண்டு நபர்களை அழைத்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு யாஸ்மினிடம் பணத்தைக் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பணத்தை வாங்கிக் கொண்டு, தனது மகளுடன் யாஸ்மினா சென்றபோதுதான், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அந்த பணப்பையைப் பறித்துச் சென்றனர். மேலும் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததும், அதில் ரூ.1.80 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் ஜெயகீதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தைக் கொள்ளையடித்த நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Also Read: பிடிபட்ட பாம்பை வனத்தில் விடாமல் போதையில் கலாட்டா; கர்நாடகாவில் முதியவருக்கு நேர்ந்த கதி!