Tamilnadu

"என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன்": வீர் சக்ரா விருதுபெற்ற மறைந்த ராணுவ வீரர் பழனி மகனின் லட்சியம்!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவரும் ஒருவர்.

இந்நிலையில் வீர தீரச் செயல் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவியிடம் வீர் சக்ரா விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்நிகழ்வு குறித்து ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி கூறுகையில், "ராணுவத்தில் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்தேன், நீ அதிகாரியாக ராணுவத்தில் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டும் என அடிக்கடி எனது கணவர் மகனிடம் கூறுவார்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது மகன் பிரசன்னா,"எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன். ராணுவத்தில் அதிகாரியாகப் பொறுப்பேற்பதே எனது லட்சியம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை 1 கி.மீ விரட்டிச் சென்று பிடித்த ஆய்வாளர் மாதய்யனுக்கு முதல்வர் பாராட்டு!