Tamilnadu

“அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்” : இடிதாக்கி பாட்டி, பேரன் பலி!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று நாட்களாக ஜெயம்கொண்டம் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, ஆறுமுகம் வீட்டின் மீது பெரிய சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் மற்றும் அவரது பாட்டி லட்சுமி மீது விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் மற்றொரு அறையில் தூங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அஜித்குமாருக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விடுதியில் அடைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் உட்பட 4 பேர் கைது: அதிர்ச்சி சம்பவம்!