Tamilnadu

செலவுக்கு பணம் கேட்டு தராத ஆத்திரம்.. வீட்டில் இருந்த டூவீலர் வாகனங்களை தீ வைத்து எரித்த முதியவர்!

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நகுல்சாமி. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டு வெளியே குபுகுபுவென புகை வெளியே வந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது இருசக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களில் தீயை அக்கம்பக்கத்தினர் அணைத்தனர்.

ஆனால் அதற்குள் இருசக்கர வாகனங்கள்  எரிந்து சாம்பலானது. அதை வீட்டுக்கு வெளியில் போட்டனர். நகுல்சாமி தீக்காயங்களுடன் அலறிக் கொண்டிருந்தார். அவரது கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தரப்பட்டு நகுல்சாமி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பின்னர் இதுதொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில், நகுல்சாமி ஓய்வு பெற்று விட்ட காரணத்தால் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நகுல்சாமி இன்று அதிகாலை அவர் தனது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி  தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Also Read: புனீத் ராஜ்குமாருக்கு இறுதி முத்தம் கொடுத்த வழியனுப்பி வைத்த கர்நாடக முதலமைச்சர்: திரைத்துறையினர் அஞ்சலி!