Tamilnadu

“கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி” : கடலூரில் நடந்த சோகம்!

கடலூர் மாவட்டம், தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி மணிகண்டன் வயலில் வேலை பார்ப்பவர்களுக்குச் சேர்ந்து மதிய உணவு தயாரிக்க வேண்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனலட்சுமி மதிய உணவிற்குச் சூடாக சாம்பார் மற்றும் சாதம் தயார் செய்து சமையல் அறையில் வைத்திருந்தார்.

பின்னர் குழந்தை கிருபாஸ்ரீக்காக அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையிலிருந்த குழந்தை அங்கிருந்த சாம்பார் பாத்திரத்தின் மூடியை இழுத்தபோது எதிர்பாராத விதமாக தவறி பாத்திரத்திற்குள்ளேயே விழுந்தது.

சில நிமிடத்திலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி குழந்தையை சாம்பார் பாத்திரத்திலிருந்து உடனே தூக்கினார். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் வெந்து போயிருந்தது. பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் சாலை விபத்தில் பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!