Tamilnadu

“ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் தொடரட்டும்” : தினகரன் தலையங்கம்

தி.மு.க அரசு, ஊழல் மற்றும் முறைகேடாக சொத்து குவித்த அ.தி.மு.க மாஜி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான அதிரடி நடவடிக்கைகளை தொடர வேண்டுமென தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தினகரன் நாளேட்டின் நேற்றைய தலையங்கம் (செப்., 18, 2021) வருமாறு:

அ.தி.மு.க ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த வேலுமணி, வீரமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், தங்களது துறையில் மெகா ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதை தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னரிடம் ஆதாரங்களுடன் புகாரும் தெரிவித்திருந்தார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியின்போது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் கடந்த ஜூலை மாதம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சாயப்பட்டறைகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த மாதம் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, கோவை, திண்டுக்கல் உட்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது. மேற்கண்ட 2 சோதனைகளிலும் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பதவி வகித்த காலத்தில் 654 சதவீதம் அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் தகவல்கள் எழுந்தது. ஆதாரங்கள் வலுவாக சிக்கியதை தொடர்ந்து, கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னை, பெங்களூரூ, திருப்புத்தூர் உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.

சோதனையில் கணக்கில் வராத பல லட்சக்கணக்கில் பணம், அமெரிக்க டாலர்கள், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள், பல கிலோ கணக்கில் தங்கம், வைரம், பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின்போது மணல் சிக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மதுரையில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைத்தது, மணலை விற்றது உட்பட பல ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இவை 3 அமைச்சர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக நடத்தப்பட்டதாக தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல்ராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் முறைகேடு, பாலம், சாலைப்பணி டெண்டர்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில், அடுத்தடுத்து விசாரணை, ரெய்டு வேகமடைந்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, ஊழல் மற்றும் முறைகேடாக சொத்து குவித்த அ.தி.மு.க மாஜி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான அதிரடி நடவடிக்கைகளை தொடர வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிரடி தொடரட்டும்!

Also Read: "சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.. நூற்றாண்டு கண்ட வகுப்புரிமை அரசாணை" - முரசொலி தலையங்கம்