Tamilnadu

பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்!

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பொதுமக்களிடம் பிடிபட்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவண எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டைப் பூட்டிவிட்டு விருத்தாசலம் அருகே துக்க நிகழ்வுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர், அன்பழகன் வீட்டு முன்பக்க பூட்டை உடைத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் செல்வதை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தற்செயலாகப் பார்த்துள்ளனர்.

மேலும், அன்பழகன் வீட்டுக்குள் சென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். அப்போது, அன்பழகன் வீட்டிலிருந்த பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் வெளியே வந்துள்ளனர்.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்த காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களைப் பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் போட்டுவிட்டுச் சென்ற அந்தப் பையில் அறுபதாயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அதை உரியவர்களிடம் ஒப்படைத்த போலிஸார், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் போலிஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: விறுவிறு விசாரணையில் சிக்கும் பகீர் தகவல்கள்!