Tamilnadu

“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். எருமையூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மேத்யூவின் கூட்டாளியான வெற்றிவேல் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தர்காஸ் கிறித்தவ ஆலயம் அருகில் அபிஷேக் என்ற வாலிபரை வெற்றிவேலின் மற்றோரு நண்பர்களான சச்சின் மற்றும் மதன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதனையடுத்து அந்த கொலை வழக்கில் சச்சின், மதன் ஆகிய இருவரும் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று, அந்தக் கொலைக்கு உதவி செய்ததாகக் கூறி, வெற்றிவேலைப் பழிக்குப்பழியாக கடந்த 14ம் தேதி நடுவீரப்பட்டு சித்தேரி அருகில் வெட்டி படுகொலை செய்தது.

அதோடுமட்டுமல்லாது, தலையை தனியாக வெட்டி அபிஷேக்கை கொலை செய்த அதே கிறித்தவ ஆலயத்தின் அருகே வீசிவிட்டு சென்றனர். இதனையடுத்து வெற்றிவேலின் தலை மற்றும் முண்டத்தை கைப்பற்றிய சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பெரும்புதூர் டி.எஸ்.பி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில், நேற்று நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி 26, ரிஷிகேஷ் 25, லாரன்ஸ் 28, மதி(எ)மதிவாணன் 25, முகமது அலி 28 ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தப் படுகொலை குறித்து கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், “தங்களுடைய நண்பன் அபிஷேக் ஆத்மா சாந்தி அடைவதற்காக அவன் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் அபிஷேக்கின் கொலைக்கு உடந்தையாக இருந்த வெற்றிவேலின் தலையை வீசிவிட்டு சென்றோம். ஆனால் சச்சின் மற்றும் மதன் எங்கள் கையில் சிக்கி இருந்தால், இன்னும் கொடூரமாக அவர்களை கொலை செய்திருப்போம்” என்று கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Also Read: காரில் சென்ற பெண் மருத்துவர் மழைநீரில் மூழ்கி பலி: அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய தரைப்பாலத்தால் நடந்த அவலம்!