Tamilnadu

“குடிக்கவே மாட்டோம்” என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இளைஞர்கள்... ஜாமின் மறுத்த நீதிபதி : நடந்தது என்ன?

திருச்சியைச் சேர்ந்த சிவக்குமார், கார்த்திகேயன் இருவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்த்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

இப்படி மது குடித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் மது பாட்டிலால் தாக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இருவரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமின் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மனுதாரர்கள் இருவரும் இனி மேல் குடிக்கமாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் இருவரும் இனி மது குடிக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இதை நீதிபதி ஏற்க மறுத்து அவர்களது ஜாமின் மனுவை ரத்து செய்தார்.

மேலும், ஊர் முக்கியஸ்தர்கள் யாராவது உறுதிமொழி வழங்க வேண்டும். அப்படி உறுதிமொழி வழங்கினால் ஜாமின் வழங்குவது பற்றிப் பரிசீலிக்கலாம் எனக் கூறி நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்தார்.

Also Read: தையல் பழக வந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... அக்கா-மாமா இருவரும் போக்சோவில் கைது!