
இந்தியாவின் மின்னணு விநியோக உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டு, 'சோர்ஸ் இந்தியா 2026' என்ற 15-வது எடிஷன் நிகழ்வை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ்நாடு வர்த்தகத்திற்கு முதன்மையாக இருக்கிறது. அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சிக்கும் முதன்மையாக இருக்கிறது. இந்தியாவில் மொத்த ஏற்றுமதி 45 பில்லியன் வளர்ச்சியாக உள்ளது. இதில் 18.5 பில்லியன் வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) உடன் இணைந்து திறன் வளர்ச்சிப் பயிற்சிகளை அளிப்பதிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. சென்னை அருகே ராணிப்பேட்டையில் இன்னும் வளர்ச்சி அடைய முதலமைச்சர் வழிகாட்டுதல் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உற்பத்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததன் மூலம், உற்பத்தி ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் பரவலாகக் கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது. செமிகண்டக்டர் (Semiconductor) ஆராய்ச்சி குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த தலைமுறை வளம் பெறப் பள்ளிகளிலேயே கவனம் செலுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். கொரியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருக்கின்றன. இந்த நாடுகளுக்குத் திறன் பயிற்சி பெற்றவர்களைத் தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்ல அரசு உதவியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.






