Tamilnadu

திருமணத்திற்கு ஏன் அழைக்கவில்லை? - நண்பர்களுடன் நடந்த தகராறில் ஒருவர் பலி : பதறவைக்கும் கொலை சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கல்லுகுண்டுக்கரை குளத்தங்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, விஜய்க்கும், மேல சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த செந்தில் ராஜா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில் ராஜாவின் தம்பி சின்னமுத்துவை விஜய் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி கலிபுல்லா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் விஜயை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுவிட்டனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்திலிருந்த விஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில், சசிதரன் என்பவரின் திருமணத்திற்கு விஜயை அழைக்காததால் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக நண்பர்களுடன் சேர்ந்து சசிதரன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய சசிதரன் உள்ளிட்ட 8 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு அழைக்காததால் ஏற்பட்ட தகராறில் நண்பர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன் : 2 பேரை கைது செய்த போலிஸ்!