Tamilnadu

நகைக்காக கொலை... சந்தேகம் வரக்கூடாது என இறுதிச்சடங்கிலும் பங்கேற்ற பெண் : போலிஸில் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம், முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி (65). இவரது கணவர் அன்மையில் மரணமடைந்ததை அடுத்து மகன் பிராங்கிளினுடன் வசித்து வருகிறார். பிராங்கிளின் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பிராங்கிளின் வேலை காரணமாக மதுரை சென்றுள்ளார். இதனால் ஜாக்குலின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து 16ம் தேதி பிராங்கிளின், தாய் ஜாக்குலினுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனால், வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களிடம் தொலைபேசியில் அழைத்து, அம்மா போனை எடுக்கவில்லை, என்னவென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஜாக்குலின் மேரி நாற்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் மகனுக்கு தெரிவித்தனர்.

பின்னர் உடனே தஞ்சாவூர் வந்த பிராங்கிளின், தனது தாய் அம்மா ஜாக்குலினின் இறுதிச் சடங்குகளை முடித்துள்ளார். போலிஸார் நடத்திய விசாரணையில், தனது தாய்க்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அதனால் இறந்திருக்ககூடும் என்று என தெரிவித்துள்ளார். இதனால் போலிஸார் மர்ம மரணம் என வழக்கை முடித்து விட்டனர்.

இதையடுத்து, ஜாக்குலின் மேரி அணிந்திருந்த செயின் மற்றும் வளையல் காணாமல் போனதை அறிந்த பிராங்கிளின் போலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், ஜாக்குலின் உடற்கூறு ஆய்விலும், கொலை செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவ அறிக்கை வரவே மீண்டும் போலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அப்போது, வீட்டில் வேலை பார்த்த ஆரோக்கிய டென்சியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து, போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் ஜாக்குலினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் ஆரோக்கிய டென்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: புதுவையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற ஓவியர்கள் கைது; ரூ.58 லட்ச போதைப் பொருட்கள் சிக்கியது எப்படி?