
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின்படி, முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் மணிகண்டன், ”முத்தான, சத்தான திட்டங்கள் மூலம் பல திறமையாளர்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. கிராமபுற, பழங்குடியின மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுத்து வருகிறார்கள்.
அறிவை, கல்வியை மூலதனமாக கொண்டு இந்த திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இன்று போடப்படும் விதை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதை இனிவரும் காலங்களில் நாம் பார்க்கப்போகிறோம்" என தெரிவித்தார்.








