
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” விழாவில் ஆற்றிய உரை :-
'உலகம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகின்ற நிகழ்ச்சி இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சியில் மிக, மிக முக்கியமான ஒரு நாள். தமிழ்நாட்டு மாணவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு பேப்பர், ஒரு பேனா இருந்தாலே போதும்,
அவர்கள் நிச்சயமாக சாதித்து விடுவார்கள், எங்கேயோ உயரங்களுக்கு போய்விடுவார்கள். அப்படிப்பட்ட உங்களுடைய கைகளுக்கு இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் லேப்டாப்ஸை கொடுக்க இருக்கின்றார்கள்.
திராவிட இயக்கத்தை பொறுத்தவரைக்கும் அது எப்போதுமே ஒரு அறிவு இயக்கம். அறிவியலை கொண்டாடுகின்ற ஒரு இயக்கம். இந்த நிகழ்ச்சிக்கு, 'உலகம் உங்கள் கையில்' என்ற தலைப்பை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வைத்திருக்கிறார்கள். சரியாக 80 ஆண்டுகளுக்கு முன்பு, 1946 ஆம் வருடம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையினுடைய பெயர் இனிவரும் உலகம். அவருடைய அந்த உரையில் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்படி எப்படியெல்லாம் இருக்கும் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார். "தூரத்தில் இருந்து ஒரு உருவத்தைக் காட்டி பேசிக் கொள்ளும் கருவி நிச்சயம் வரும்" என்று 1946- ஆம் வருடமே தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
இன்றைக்கு பெரியார் அவர்கள் சொன்னதுதான் வீடியோ காலாக ஆக நம்முன்பு நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் அவர்கள் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். "எதிர்காலத்தில் ஒரு கருவி வரும். அதைப் பயன்படுத்தி, ஒரு இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வரும்" என்று சொன்னார். பெரியார் அன்றைக்கு சொன்னதற்கு ஓர் உதாரணமாக தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனைபேரும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், தொலைநோக்கு பார்வையோடு அன்றைக்கு சொன்னது எல்லாம், இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளாக நம்முடைய கைகளில் இருந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட, தந்தை பெரியாருடைய வழியில் வந்த, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் பள்ளிகளில் கணினி கல்வியை (computer education-ஐ) முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1997-ஆம் ஆண்டு IT Policy-ஐ அறிமுகப்படுத்தியதும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான். இன்றைக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற IT Tidel Park தொடங்கி, IT துறையில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கான உறுதியான அஸ்திவாரத்தை (strong foundation-ஐ) போட்டவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
இது மாதிரியான முன்னெடுப்புகளால் தான், இன்றைக்கு, “கல்வி என்றால் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றால் கல்வி” என்று சொல்கின்ற ஒரு மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு பெயர் பெற்றிருக்கிறது. உலகெங்கும் நம்முடைய மாணவர்கள் சாதித்து கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசுப்பள்ளியில் படித்த பலர் இன்றைக்கு Google, Microsoft, ISRO, NASA என்று உயர்ந்த பொறுப்புகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மேடை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் படித்து, இஸ்ரோவின் இயக்குநராக உயர்ந்த திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இங்கே நம் முன்பு சிறப்பு விருந்தினராக உட்காந்து இருக்கிறார்.
சந்திரயான், மங்கல்யான் என்று பல வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்திக் காட்டி, ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் அய்யா மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஒரு Inspiration-ஆ திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இன்றைக்கு பல மயில்சாமி அண்ணாதுரைகளை உருவாக்க வேண்டும் என்றுதான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த லேப்டாப் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்த லேப்டாப்ஸை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த லேப்டாப்ஸ் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு Game Changer-ஆக இருக்கும். முழுக்க முழுக்க அலசி ஆராய்ந்துதான், Industry-யில் எது சிறந்தது என்று select பண்ணிதான் இந்த இந்த லேப்டாப்ஸை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு தேர்வு செய்திருக்கிறார்.
நம்முடைய திராவிட மாடல் அரசு, மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு, ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி இருக்கிறது. காலை உணவுத் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் இப்படி பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இன்றைக்கு இந்த லேப்டாப் திட்டமும் இணைந்து இருக்கிறது.
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து IAS, IPS ஆகின்றவர்களுடைய எண்ணிக்கை இன்றைக்கு தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. இங்கே வந்திருக்கக்கூடிய பிரசாந்த் IAS, இன்பா IPS மாதிரி நிறைய பேரை நம்முடைய அரசு உருவாக்கி இருக்கிறது. இவர்களை மாதிரி, உங்களில் இருந்து, பல IAS, IPS, IFS அலுவலர்கள் உருவாக வேண்டும். அதற்கு இந்த லேப்டாப் நிச்சயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Microsoft, Apple, Facebook, SpaceX என்று உலகின் பல பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியது ஒரு லேப்டாப்பில் தான். ஒரு Laptop, Internet connection, Innovative Mindset இருந்தால் அதன் மூலம் நம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.
உலகத்தின் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காக, மாணவர்களுக்காக கண்டிப்பாக திறக்கும். உங்களுடைய தாத்தா பாட்டி காலத்தை எடுத்து கொள்ளுங்கள். அவர்களில் எத்தனை பேர் பள்ளிக்கூடத்திற்கு, கல்லூரிக்கு போனார்கள் என்று யோசித்து பாருங்கள். அப்படியே போயிருந்தாலும், சிலேட் வாங்குவதற்கு வசதி இல்லாமல், மண் தரையில் விரலால் எழுதி படித்தவர்கள் நிச்சயம் உண்டு.
ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய குழந்தைகள் Smart Class-ல் படிக்கிறார்கள். உங்களுடைய கைகளுக்கு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் லேப்டாப்பை கொடுத்திருக்கிறார். இதற்கு பேர்தான் வளர்ச்சி, இதற்கு பேர்தான் முன்னேற்றம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இதற்கு பேர் தான் திராவிட மாடல். தமிழ்நாட்டை உயர்த்திய மாடல்.
இந்த திராவிட மாடல் தொடர மாணவர்கள் உங்களுடைய அன்பும் ஆதரவும் மிக, மிக முக்கியம். உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களைத் தருவதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தயாராக இருக்கின்றார்.
கல்வி தான், யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத, பறிக்க முடியாத சொத்து என்று, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார். படிப்பில்லாமல் வெற்றி பெற்றவர்கள் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், படிப்பால் வென்றவர்கள் நிச்சயம் லட்சம் பேர் இருப்பார்கள். லேப்டாப் பெறுகின்ற மாணவச் செல்வங்கள் உங்களுடைய கல்வியும், அறிவும் மென்மேலும் சிறக்கட்டும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








