Tamilnadu
“மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.70 கோடி மோசடி” : ஆளும் கட்சிக்கு பங்கு உள்ளதா? - போலிஸார் விசாரணை !
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உருவாக்கபட்டது. ஆனால், தற்போது தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்ற பயனாளர்களின் பணம் உரிய முறையில் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழக அரசு காப்பீடு மூலம் கிடைக்க வேண்டிய தொகை வந்து சேராததால் புகார் எழுப்பினர். தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தை யுனைடெட் இன்சூரன்ஸ் இந்தியா நிறுவனம் கையாண்டு வருகிறது. இதில் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனமாக medi assi பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்றவர்களுக்கான தொகை என்பது, சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காப்பீடு மூலம் வந்து சேராதது தொடர்பாக, மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனமான med assi பிரைவேட் லிமிடெட் அதிக தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகி அஜித் குமார் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக அரசு காப்பீட்டு திட்டத்திற்கான தொகை, தொடர்புடைய அரசு மருத்துவமனைக்கு செல்வதை தொழில்நுட்ப ரீதியாக மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி மோசடி செய்யப்பட்ட தொகையானது எந்த வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது என ஆய்வு செய்து பார்த்தபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் வங்கி கணக்கு போலியாக துவங்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்கிலிருந்து பணமானது, மெடி அசி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் குணசேகரன், சரவண குமார் மற்றும் கமலஹாசன் ஆகிய 3 பேரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கும் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலிஸார் சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை இந்த மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் குணசேகரன் என்பவர் கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார்.
மேலும் சரவணகுமார் தொழில்நுட்ப ரீதியாக மோசடி செய்வதில் திறமை வாய்ந்தவராக இருந்ததால் அதை பயன்படுத்தி, அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றடையும் பணத்தை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மட்டும் குறிவைத்து இந்த கும்பல் மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை மோசடி செய்து சொத்துக்களை வாங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான மூவரின் 10 வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் முடக்கியுள்ளனர். இந்த கும்பலின் தலைவன் குணசேகரனிடம் இருந்து, 8 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் காப்பீட்டு நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவத்தை வைத்து மோசடி அரங்கேற்றியதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட தனியார் நிறுவன இன்சூரன்ஸ் நிர்வாகிகள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் முடிவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மோசடியில் அரசு ஊழியர்களுக்கும், அரசு மருத்துவமனை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!