Tamilnadu

சென்னை பல்கலைக்கழகத்தை அவலநிலைக்குத் தள்ளிய அ.தி.மு.க அரசு... குமுறும் பேரவைக்குழு உறுப்பினர்!

சென்னை பல்கலைக்கழக பேரவைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேரவைக்குழு உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விகள் மூலம் அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தற்போது வெளிப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பென்ஷன் வழங்காதது, உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது என பல்கலைக்கழக பேரவை உறுப்பினரான மாதவரம் சுதர்சனம் கேள்வி எழுப்பினார்.

அதேபோல், தொலைதூர கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், பல துறைகளில் மாணவர்களே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பேராசிரியர்களுக்கு தற்போதுதான் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பல பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியும் முறையாகக் கிடைக்காததால் மிக ஆபத்தான நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இருப்பதாகவும் மாதவரம் சுதர்சனம் தெரிவித்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய பல தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க அரசு அவலநிலைக்குத் தள்ளி உள்ளதாகவும் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் பல்கலைக்கழக நிர்வாகம் சீர் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அன்மையில் கூட துறைத் தலைவர், மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதால், அந்த மாணவி மன உளைச்சலால் கையை அறுத்துக் கொண்டார். மேலும் துறைத் தலைவர் மீது நடவடிக்கை மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியபோது, காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்தனர். இப்படி பல்கலைக்கழகத்தின் நிர்வாக குளறுபடிகளை, அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாததால் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Also Read: ‘லேப்டாப் கொடுக்கவில்லை’ என்று புகார் சொன்ன மாணவி : டெண்டர் எடுத்தவன் மேல் பழியைப் போட்ட வைத்திலிங்கம்!