Tamilnadu

“முகக்கவசம் அணியாததே கொரோனா பரவலுக்கு முக்கியக் காரணம்” : எச்சரிக்கை விடுக்கும் தமிழக சுகாதாரத்துறை !

தமுகக்கவசம் அணியாததுதான் கொரோனா பரவலுக்கு முக்கியக் காரணம் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “முகக்கவசம் அணிவதை மக்கள் மறந்துவிட்டனர். முகக்கவசம் அணியாததே கொரோனா பரவுவதற்குக் காரணம். அதிகாரிகள், போலீஸாரைப் பார்த்த பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்கள். உங்களைச் சுற்றித்தான் கொரோனா உள்ளது.

பிரிட்டன் உருமாறிய கொரோனா 14 பேருக்கும் தென் ஆப்பரிக்கா உருமாறிய கொரோனா ஒருவருக்கும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகரிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 4 ஆயிரத்துக்கும் குறைவான தெருக்களில் தொற்று பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் 512 இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கோயில் திருவிழாக்களில் கூட்டம் கூடுவது குறித்தும் விழாக்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும். பேருந்தில் செல்பவர்கள் கூட்டத்தை தவிர்க்க பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் 500 க்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது 1700 க்கும் மேலான தொற்றளர்கள் ஒரு நாளில் கண்டறியப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 2ஆயிரத்தை தாண்டும். மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தும் பள்ளி கல்லூரிகள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராத சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சமூக இடைவெளி மிக கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10