Tamilnadu

தலைமறைவான தந்தை - மகள் : போலி சான்றிதழ் வழங்கிய நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலிஸார் திணறல்!

தலைமறைவாக உள்ள மாணவி மற்றும் தந்தையால் போலி சான்றிதழ் தயாரித்த நபரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திக்ஷா எனும் மாணவி 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் சமர்ப்பித்திருந்த சான்றிதழ் போலி என்று தெரிந்தவுடன் இதுதொடர்பாக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி திக்ஷா மற்றும் அவருடைய தந்தை பல் மருத்துவர் பாலச்சந்தர் ஆகியோரின் மேல் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் மாணவியும் அவருடைய தந்தையும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகாததால் அவர்களை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி மற்றும் அவருடைய தந்தை அலைபேசி எண் உபயோகத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களை கண்டறிய முடியாமல் போலிஸார் திணறுகின்றனர் அதேபோல் மாணவி திக்ஷா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்தர் இருவரிடமும் தொடர்பில் இருந்த அனைவரின் எண்களும் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் மாணவி மற்றும் அவருடைய தந்தை இருவரையும் கைது செய்தால் மட்டுமே அவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய நபரை அடையாளம் காண இயலும் என்றும் அவர்கள் தலைமறைவான காரணத்தால் வழக்கில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளதாகவும் போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: தொழிலதிபர்களை குறிவைத்து வேலையை காட்டும் மோசடி கும்பல்: ஏமாந்த சென்னைக்காரர்.. மும்பையில் நைஜீரியர் கைது!