Tamilnadu

“எனக்கு பயமா இருக்குமா” : நீட் தேர்வால் மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் மகள் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்தவர் காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம். இவரது மகளான ஜோதி துர்கா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எப்போதும் தனது தோழியுடன் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருக்கும் சூழலில் நேற்று தோழி இல்லாத நிலையில் படித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஜோதி. அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக அறையை தட்டியபோது திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்ததில் ஜோதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது

Also Read: “அனிதா முதல் சுபஸ்ரீ வரை நீட் பலி கொண்ட 8 உயிர்கள்” : அனிதாக்களை மறவோம்..! #ScrapNeet

இதனையடுத்து உடலை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, “நல்லாதான் படிச்ச ஆனா எனக்கு பயமா இருக்கு. ஒரு வேள சீட் கிடைக்கலனா நீங்க எல்லாருமே ஏமாந்துடுவீங்க, சாரி அப்பா.. சாரி அம்மா..” மாணவி ஜோதி தூர்கா தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பு உருக்கமான வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

12ம் வகுப்பில் மாவட்ட அளவில், பள்ளி அளவில் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கும் திறமையான மாணவர்கள் மீது நீட் எனும் கொடிய விஷத்தை கக்கி மத்திய மாநில அரசுகள் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ என தமிழக மக்கள் கடுமையான வேதனைக்கு ஆளாகி வருவது இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்களின் ஓலத்தின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

Also Read: “இன்னும் எத்தனை உயிர்கள்..? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?” - மு.க.ஸ்டாலின் வேதனை!