மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய் ஏழை எளிய மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது.
நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாமல் அனிதா தொடங்கி கோவை சுபஸ்ரீ வரை பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது, அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன் கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரை இழந்திருக்கிறோம்.
நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?
இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்:
எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.