Tamilnadu

கடன் வசூலிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர தடை ஏன்? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!

வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு திவால் மற்றும் கடன் மோசடி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த சட்டதிருத்தங்கள், கடன் வசூல் நடவடிக்கைகளுக்காக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடர வழிவகை செய்கின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவித்து, அதை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத்திய அரசின் இந்த அவசர சட்டம், திவால் மற்றும் கடன் மோசடி சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும், கடன் வசூல் தொடர்பான நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், மனுதாரர் ஒரு பைனான்சியர்... அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்... இப்போது கூட அவர் உரிமையியல் வழக்கு தொடரலாம்... அந்த உரிமை பாதிக்கப்படவில்லை... எனத் தெரிவித்தார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... மாறாக தற்போது உரிமையியல் வழக்கு தொடர எந்த தடையும் இல்லை... குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து விட்டால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Also Read: தேவை பட்டியலில் இருந்து முகக்கவசம் நீக்கம்: கொரோனா பரவலை தீவிரப்படுத்த திட்டமிடுகிறதா மோடி அரசு?