Tamilnadu
“ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் - அரசு அதிகாரிகளின் உதவியுடன் மணல் திருட்டு” : சிவகங்கை விவசாயிகள் வேதனை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் குவாரிகள் அமைக்க அதிகாரிகள் அனுமதிக் கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் மழைக்காலம் தொடங்கும் நிலையில் குவாரிகளுக்கு அனுமதிக்கொடுக்க கூடாது என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அதிகாரிகள் குவாரிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கொடுத்ததன் விளைவாக, ஆற்றுப்பகுதியில் உள்ள மணல்களை விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுக்க துவங்கியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்க செல்லும் அப்பகுதி மக்களை மணல் கொள்ளையர்கள் அடியாட்டகளை வைத்து விரட்டி அடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்த மணல் திருட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருப்பதால் அதிகாரிகள், போலிஸார் இதனைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் துணிந்த மணல் மாபிய கும்பல்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தற்போது பகலிலேயே மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் வைகை ஆற்று மணலுக்கு தான் எப்போது மவுசு அதிகம். அதனால் ஒரு லோடு மணல் 70 முதல் 80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.
தற்போது ஊரடங்கு காரணமாக அரசு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு வைகை ஆற்றை ஒட்டியுள்ள பட்டா பகுதியில் அனுமதி வாங்கிவிட்டு, பல அடிக்கு மணல்களை எடுத்து வருகின்றனர்.
இதில், சவுடு மணல், கிராவல், உபரிமன் எனப் பல வகைகளில், 50 அடி முதல் 70 அடி வரை மணல் அள்ளி, மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மட்டும் தினமும் ஆயிரம் லாரிகள் மூலம் மணல் எடுத்து பல கோடிகளைக் குவித்துள்ளனர் மணல் கொள்ளையர்கள்.
இந்தப் பகுதியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளும் போலிஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியினர் துணையில்லாமல் இது எப்படி சாத்தியம். உரிய வகையில் விசாரணை நடத்தினால் ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள். எனவே அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!
-
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!
-
முதல் முறை... : தடம் புரண்டது வந்தே பாரத் ரயில்!
-
“வேலூரில் 41.5° செல்சியஸ் வெப்பத்துடன் உச்சம் தொட்ட வெயில்!” : வானிலை ஆய்வு மையம் தகவல்!
-
பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை : காரணம் என்ன?