Tamilnadu

“வாடகை கொடுக்க வழியில்லை” : கூலி தொழிலாளர்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை சென்னையிலிருந்து வெளியேறும் அவலம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த கொரோனாவால் தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.

அதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்தவர்களில் 70 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

மருத்துவத்துறை பணியாளர்களும் நோயைக் கட்டுப்படுத்தமுடியாமல் திணறிவருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மட்டும் ஜூன்19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பு குறையாததாலும், வாழ்வாதாரம் இழந்ததாலும் சென்னைக்கு குடிபெயர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கே செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னையைக் காலி செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்கள் பாதித்ததாலும் வர்த்தக முடக்கத்தாலும் இத்தகைய முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக பலர் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் முன்பணத்தை கழித்துவிட்டு வீட்டை காலி செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுனர். வாடகை வேன்களில் வீட்டுச் சாமான்களை ஏற்றிக்கொண்டு குடும்பம் குடும்பமாக மக்கள் ஊரைக் காலி செய்யும் காட்சிகள் பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.

சென்னைக்கு வந்தால் நிச்சயம் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையோடு வந்த கூலித் தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர், பட்டதாரிகள் சென்னை மீண்டும் தங்களை அழைக்கும் என்ற மனதுடனே சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

Also Read: ஊதியம் தராமல் அலைக்கழிக்கும் அ.தி.மு.க அரசு.. வேதனையுடன் திணறும் கொரோனா ஆய்வக ஊழியர்கள்! #CoronaCrisis