Tamilnadu

பாத்திமாவின் மரணத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்!

கடந்த 8ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.

Also Read: “தமிழ்நாடு பாதுகாப்பானது என நம்பித் தானே அனுப்பினோம்...”- ஐஐடி மாணவி பாத்திமா தாயார் வேதனை!

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் கல்லூரி வளாகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலை போன்று தெரியவில்லை என தெரிவித்தார். மேலும், தனது மகளின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை செய்தியாளர்களிடையே கேள்வியாக முன் வைத்தார்.

Also Read: “சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

பாத்திமாவின் மரணத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீப் முன்வைக்கும் 10 கேள்விகள் :

  1. எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?

  2. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?

  3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எவ்வாறு அங்கு கிடைத்தது.

  4. இறப்பதற்கு முன்றைய நாள் இரவில் உணவகத்தில் வைத்து 1 மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணவி.? 1 மணி அழுகிறாள் என்றால் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.

  5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கடந்தது.

  6. எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்.

  7. தினமும் இரவு 8 மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அழுதிருக்கிறாள் என்றால் அவளுக்கு அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?

  8. எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?

  9. சம்பவம் நடந்த அன்று இரவு 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கும் போது இரவு 9:30 வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.

  10. எனது மகள் மரணத்தில் இதுவரை ஐ.ஐ.டி.யிடமிருந்தது அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐ.ஐ.டி.யின் மாணவர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..?

Also Read: “ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை” - மு.க.ஸ்டாலின் சாடல்!

பாத்திமாவின் தந்தை லத்தீப் கேட்கும் இந்த கேள்விகளுக்கு தமிழக அரசும், காவல்துறையும், ஐ.ஐ.டி நிர்வாகமும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.

Also Read: "சி.சி.டி.வி காட்சிகளை கொடுக்க மறுக்கிறது ஐ.ஐ.டி" - மகள் பாத்திமாவின் மரணத்துக்கு நியாயம் கேட்கும் தந்தை