Sports

நெருங்கிய உறவினரால் ஏமாற்றப்பட்ட பாண்டியா சகோதரர்கள் : 4.3 கோடி மோசடி புகாரில் உறவினர் கைது !

பிரபல கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் தாங்கள் கிரிக்கெட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களது ஒன்று வீட்டா சகோதரரான வைபவ் பாண்டியாவும் சேர்ந்துள்ளார்.

அதன்படி ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் தலா 40 சதவீதமும், வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடும் மேற்கொண்டு ஒரு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அதன் லாபத்தை முதலீட்டுக்கு ஏற்ப பிரித்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 2021ம் ஆண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் செயல்பாடுகளை வைபவ் பாண்டியா நிர்வாகம் செய்துவந்துள்ளார். இதனிடையே பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் வைபவ் பாண்டியா தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்பின்னர் பாண்டியா சகோதரர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனத்தில் இருந்து ஏராளமானப் பணத்தை முறைகேடாக தனது நிறுவனத்துக்கு வைபவ் மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் தனது லாபத்தின் சதவீதத்த்தையும் அதிகரித்துள்ளார்.

இதன் காரணமாக பாண்டியா சகோதரர்களுக்கு ரூ.4.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாண்டியா சகோதரர்கள் வைபவ்விடம் கேட்டபோது அதற்கு உரிய பதிலும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா சார்பில் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வைபவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க விரும்புவார்கள்" - அம்பதி ராயுடு கருத்து !