Sports
முதல் சீசனிலேயே அசத்தல் ஆட்டம்.. இறுதிப்போட்டிக்கு செல்லுமா குஜராத் அணி? நாளை ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை!
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக இரண்டு அணிகளை சேர்த்து 10 அணிகளோடு மெகா ஐபிஎல் போட்டியாக நடைபெற்று வருகிறது. 56 போட்டிகளாக இருந்த லீக் போட்டிகள் புதிய அணிகளின் வரவால் 70 போட்டிகளாக நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகள் விளையாடியதில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
9 வெற்றிகளை பதிவு செய்த ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் முறையே ரன் ரேட் அடிப்படையில் 2வது, 3வது இடத்தையும், 8 வெற்றிகளை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளோடு நான்காம் இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
புதிதாக இணைந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பங்கேற்ற முதல் தொடரிலேயே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் ஐந்து முறை சாம்பியனான மும்பை, நான்கு முறை சாம்பியன் சென்னை, அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறின.
2008ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணியை தவிர மற்ற மூன்று அணிகளும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றன.
பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியான தகுதி சுற்று ஆட்டத்தில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மே 24 ம் தேதி (நாளை) கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டியான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டிக்கு முன்னேறும்.
லீக் சுற்றுகள் முடிவில் அதிக ரன்களை அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப் வரிசையில் 619 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி ஓபனர் பட்லர் முதலிடத்தில் உள்ளார்.
அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் வரிசையில் 26 விக்கெட் எடுத்து அதே ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் சஹல் தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள முதல் பிளே ஆஃப் சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் மோதி இறுதி போட்டிக்குச் செல்லும் முனைப்பில் குஜராத் அணி ஈடுபட்டு வருகிறது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!