Politics

“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் மூன்று அப்பாவித் தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற செய்தி, ஒட்டுமொத்த தமிழர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

“கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.

த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.”

Also Read: “அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!